தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள்
தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள்
பாரம்பரிய விளையாட்டுகள்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வீட்டுப்பாடங்களின் திணிப்பனாலும் விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது. ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.
மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.
கிராமத்து விளையாட்டுக்கள் விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று.
ஆடுபுலி ஆட்டம்,
கபடி,
சல்லிக் கட்டு,
உறியடி,
வழுக்கு மரம்,
சிலம்பாட்டம்,
வண்டிப் பந்தயம்.
கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை,
பந்து,
பச்சைக் குதிரை,
பம்பரம்,
புளியங் கொட்டை,
கபடி,
கள்ளன் போலீஸ்
இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு ஆகும் .
பல்லாங்குழி,
தாயம்,
சில்லுக் கோடு,
தட்டா மாலை,
கும்மி,
கோலாட்டம்,
பாண்டி,
கண்ணா மூச்சி,
பூசணிக்காய்,
குலைகுலையா முந்திரிக்காய்,
எலியும் பூனையும்,
ஒரு குடம் தண்ணி ஊத்தி,
பூப்பறிக்க வருகிறோம்,
கரகர வண்டி,
சில்லுக் கோடு,
கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்,
பல்லாங்குழி,
கொழுக்கட்டை,
நொண்டி
இவை சிறுமியர்கள் மற்றும் குமரிப்பெண்களுக்கான விளையாட்டு ஆகும் .
இளமைக்காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை. "நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள்" விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கண்ணாமூச்சி,
உருண்டை திரண்டை,
அந்தக் கழுதை இந்தக் கழுதை,
கல்லுக் கொடுத்தான் கல்லே வா,
ராஜா மந்திரி,
பருப்புக் கடைந்து,
அத்தளி புத்தளி,
கில்லாப் பறண்டி,
அக்கக்கா கிளி செத்துப்போச்சு,
சீப்பு விக்கிது.
தொட்டுப் பிடிச்சு,
ஐஸ் பால்
போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும்.
1. கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி விளையாட்டில் தலைவராக கருதப்படுபவர், குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரை தலைவர் என்று கூறுகின்றனர். அவரது கண்ணினை, தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தலைவரானவர் “கண்ணா மூச்சி ரேரே… காரே முட்டே ரே ரே … ஒருமுட்டையை தின்னுபுட்டு…. ஊளை முட்டைய கொண்டுவா …." என்று பாடுவார்.
பாடல் முடிந்தவுடன் தலைவர் அந்த நபரின் கண்களைத் திறந்து விடுவார். ஒளிந்திருக்கும் குழந்தைகளை அந்த நபர் தேடிக்கொண்டு போகும் போது அவரிடம் சிக்கியவர் அவுட்டாகிறார். இதன் பின்னர் அவுட்டான நபரின் கண்கள் மூடப்படும். மீண்டும் விளையாட்டு தொடரும். தேடும் நபரிடம் அகப்படாமல் குழந்தைகள் அனைவரும் தலைவரை தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள்.
இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புறவிளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும்.
2.பல்லாங்குழி
“கொல கொலயா முந்திரிக்கா
நெறய நெறய சுத்திவா"
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த பாடல் வரிகள் இன்றைக்கு இன்பத்தை தரக்கூடியவை. பாண்டி, நொண்டி, கிளித்தட்டு என தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பெண்கள் ஆடிய ஆட்டங்கள் ஏராளம். அதிலும் பல்லாங்குழி விளையாட்டு சற்று வித்தியாசமானது.
புத்தி கூர்மைக்கு பல்லாங்குழி
பருவம் எய்திய பெண்களை திண்ணையில் தள்ளி வைத்து குறுக்கே உலக்கையை போட்டு தள்ளி வைத்தவுடன் வீட்டுப்பெரியவர்கள் முதலில் தருவது பல்லாங்குழிதான். அந்நிய ஆடவரை பார்க்காமல் மறைவாய் இருக்கும் பருவமடைந்த பெண்கள் தன் சோடி பெண்களுடன் சேர்ந்து பல்லாங்குழி ஆடவேண்டும் என்பது மரபு.
வட்டமாக குழிசெதுக்கிய பலகையில் புளியங்கொட்டையோ, சோழியோ நிரப்பி ஒவ்வொன்றாக எடுத்து விளையாடுவார்கள். இதில் கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் பெண்களின் விரலுக்கு பயிற்சியும், கணக்கு வழக்கில் தெளிவும் ஏற்படுகிறது என்பது நம்பிக்கை.
காலமாற்றத்தால் மறைந்த ஆட்டம்
சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இரவில் கண் விழித்திருக்கும் பெண்களும் இந்த பல்லாங்குழியை விளையாடி மகிழ்வர்.
திரைப்படமும் தொலைக்காட்சியும், நம்மை ஆக்கிரமித்துக்கொண்டதால் நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்றைக்கு படிப்படியாக மறைந்து வருகின்றன. ஆணுக்கு நிகராய் அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதும் விளையாட்டிற்கு நேரமின்மையும் இத்தகைய விளையாட்டுக்கள் மறைய ஒரு காரணமாக கருதப்படுகிறது.
3.சடுகுடு (கபடி )
கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களின் ஒன்றாக உள்ளது..ஜல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்)தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது.கபடி அதாவது கை+பிடி =கபடி. இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி .ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர் .மொத்த விளையாட்டு நேரம் 40நிமிடங்கள் ..இந்தியாவில் தான் முதன் முதலில் உருவாகியது இந்த கபடி விளையாட்டு..
கபடி வரலாறு:
கபடி விளையாட்டு பண்டைய காலத்தில் தோன்றியது..இது இன்றும் தமிழ்நாடு மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களும்,தெற்காசிய ஆசியாவில் இந்த விளையாட்டு பரவியது..1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கபடி சர்வதேச வெளிப்பாட்டைப் பெற்றது.1938 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் இந்தியா தேசிய விளையாட்டுகளில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது..1950 ஆம் ஆண்டில் அனைத்து இந்தியா கபடி federation (AIKF) நடைமுறைக்கு வந்தது 1979 ஆம் ஆண்டில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் , .1979 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெற்றன.
முதல் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 1980 நடைபெற்றது மற்றும் இறுதிப் போட்டியில் மற்ற அணிகள் நேபாளம் ,மலேசியா மற்றும் ஜப்பான்.1990 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் ஏழு அணிகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டுகளில் முதல் முறையாக இந்த விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது..2004 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற கபடி போட்டியின் முதல் உலக்க கோப்பைபை இந்தியா வென்றது .
முதல் ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் 2005 இல்..ஹைதாரபாத்தில் நடைபெற்றது .இந்தியா தங்கம் பதக்கம் வென்றது .2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை மக்காவில் நடைபெற்ற 2வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாடியது மீண்டும் இந்தியா தங்க பதக்கம் வென்றது..
கபடி விதிகள் :
ஜல்லிக்கட்டை மையைப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. விளையாட்டில் ஒரு குழுவிற்கு 7 பேர் இருப்பார்கள். உபரி வீரர்கள் என 5 பேர் இருப்பார்கள். இவர்கள் விளையாட்டின் போது வீரர்களுக்கு காயம், உடல்நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்குவர்.
ஒரு குழுவினர் களம் இறங்கியதும், எதிர் அணியில் ஒருவர் மூச்சை அடக்கி பாடிக் கொண்டே எல்லைக் கோட்டினைத் தொட வர வேண்டும். கோட்டினைத் தொட்டுவிட்ட பின் வெளியேற வேண்டும் முடிந்தால் வீரர்களையும் தொட்டுவிட்டு வெளியேறலாம்.
குழுவினர் தம்மைத் தொட வரும் எதிரணி நபரை தமது எல்லைக்குள் வரும் போது ‘லாவகமாக’ பிடிக்க வேண்டும். பாடிக் கொண்டே வருபவர் சில நகைச்சுவைத் ததும்பும் பாடல்களை மூச்சைப் பிடித்து பாடி “தொட்டு வெளியேற” முனைவர். கபடி, கபடி, கபடி” என்று மூச்சை அடக்கி பாடிக்கொண்டே வருபவரை இழுத்துப் பிடிக்க முனைவர் எதிர் அணியினர். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12பேர் இருப்பார்கள் ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7பேர் மட்டுமே மீதி ஐவரும் மாற்று விளையாட்டு வீரா்கள்..
இந்தியாவில் பின்பற்றப்படும் 3 முக்கிய கபடி வகைகள்:
1.சர்ஜீவ்னி :
இந்த சர்ஜீவ்னி விளையாட்டு விதிகள் என்பது சர்வதேச அளவைப் போலவே ஆனால் இதில் சிறிய வேறுபாடு ஆகும்.பாடு வருபவரின் கை,கால் ,இடுப்புப்பகுதிகளை மட்டும்தான் பிடிக்கவேண்டும..அவர் வாயை பொத்தக்கூடாது.மீறிச் செய்தால் அது ஃபவுல் ஆக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் பல முறை ரைடு போகலாம்.ரைடு போகிறவர் ஏறு தொடாமல் வந்தாலும் அவுட் செய்தால் .
2.அமர் :
நம்ம ஊரில் விளையாடப்படும் 'சர்ஜீவினி' முறை கபடிக்கு எல்லா வீரர்களும் பலசாலியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றல் இதில் பாடி வருபவரை எல்லோரும் பிடிக்கலாம். ஆனால் 'அமர்' முறை ஆட்டத்தில் பாடி வருபவரை ஒருவர் மட்டுமே பிடிக்கவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் 'தேமே' ன்னு நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.
மேலும், இதன் ஆடுகளம் வட்ட வடிவில் இருக்கும். இந்த விளையாட்டு முறை அதிகமாக பஞ்சாப்பில் தான் விளையாடப்படுகிறது. இதற்கு 'வட்டக்கபடி' என்ற பெயரும் உண்டு.
3.ஹுட்டுட்டு :
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விளையாடப்படும் விளையாட்டு. பிரிட்டிஷ் ராணுவத்தில் பொழுதுபோக்குக்காக விளையாடுகிறார்கள். ஸ்காட்லாந்து கிராமங்களில், வேறு மாதிரியான நெறிமுறைகளை வைத்து விளையாடபடும் விளையாட்டு ஹுட்டுட்டு. அமர், ஹுட்டுட்டு போன்ற கபடி விளையாட்டுகளில் விதிமுறைகள் குறைவு. ஆனால் தமிழ்நாட்டு கபடி போட்டியில் நிறைய ரூல்ஸ் இருக்கிறதாம்.
புரோ கபடி லீக்:
கிரிக்கெட் ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது..
கபடு 2014-லில் ஆராம்பிக்கப்கட்டது ஒரு மாபெரும் திருவிழாவாக வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாடினாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு ,மேலும் கபடி கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது ..இந்த உலக கோப்பையும் 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையும் இந்தியா கைப்பற்றியுள்ளது...
ஒலிம்பிக் கபடி என்ற கனவு:
கபடிப் போட்டி ,ஏன் ஒலிம்பிகில் இடம் பெறவில்லை?.
மத்திய மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் கபடி பரவலாக விளையாடப்படுகிறது நோபாளம்,இரான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் தேசிய விளையாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளன ஸ்பெயின்,கென்யா ,ஜப்பான் ,கனாட போன்ற ஆசியப் பகுதியில் அல்லாத நாடுகளும் கபடி உலகக் கோப்பையில் பங்கு கொள்கின்றன...என்பது ஒலிம்பிக்ஸ் சங்கத்துக்கு கணக்கில்லை. எத்தனை தொழில்முறை சங்கங்கள் இருக்கிறது, அவை எத்தனை போட்டிகள் நடத்துகின்றன என்பதுதான் ஒலிம்பிக்ஸ் சங்கம் கணக்கெடுத்துக் கொள்கிறது.
தற்போது, 4 கண்டங்களில் 75 நாடுகளில் கபடி விளையாடப்பட்டாலும் 26 நாடுகளில்தான் தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் உள்ளன. பல நாடுகளில் விளையாடப்பட்டாலும், தொழில்முறை சங்கங்கள் இல்லாததால் அதை சர்வதேச விளையாட்டில் ஒன்றாக அங்கீகரிக்க ஒலிம்பிக்ஸ் சங்கம் மறுத்துள்ளது. கபடியை தங்கள் நாடுகளில் விளையாடும் நாடுகள், அதற்குத் தொழில்முறை விளையாட்டாக அங்கீகாரம் அளிக்க முன்வரவேண்டும் என்பது, கபடி விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.
இவர்தான் இந்தியாவின் கபடி கில்லி-- ராகுல் சவுதாரி
இந்தியாவில் எக்கச்சக்க பெண் ரசிகைகள் ராகுல் சவுதாரிக்கு உண்டு. உத்தர பிரதேசத்தில் உள்ள பிஜினார் என்ற கிராமத்தில் இருந்து வந்தவர் ராகுல். கிராமத்தில் உள்ள படங்களுடன் அடிக்கடி கபடி விளையாடச் சென்றுவிடுவார் . கபடி ஆடிக் கொண்டிருக்கும்போதே பெற்றோர்களிடம் இருந்து அடி விழும். ஒழுங்காக படிக்கிற வழியை பாரு, கபடி ஆடி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே என பெற்றோர்கள் அறிவுறுத்த, நான் கபடி தான் ஆடுவேன் என பிடிவாதம் பிடித்தார் ராகுல். நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க, சோத்தை போடுவது மட்டும் எங்களோட கடமை என சொல்லிவிட்டு தண்ணி தெளித்துவிட்டார்கள் பெற்றோர்கள். பிடிவாதம் பிடித்த ராகுல் பெற்றோர்களிடம் சரியாக பேசுவதையே நிறுத்தி விட்டார். முழு கவனத்தையும் கபடியில் குவித்தார். வருடங்கள் உருண்டோட, மாவட்ட அணி, மாநில அணி என ராகுல் முன்னேறினார். கபடியை பொறுத்தவரை தோனியின் ஆட்டிடியூட் கொண்டவர் ராகுல்.
4.ஆடுபுலி ஆட்டம்
ஆடு புலி ஆட்டம் அல்லது குழை எடு ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது.
இது மிகவும் எளிய விளையாட்டு. ஒரு வட்டத்தினுள்ளே குழை இருக்கும். வட்டம் ஏறைக்குறைய 50 யாட் விட்டம் கொண்டது. வட்டத்திற்கு அப்பால் எல்லை கோடுகள் உண்டு. படத்தை பார்க்கவும். யாரவது ஒருவர் வட்டத்துக்குள் இருக்கும் குழையை எடுத்துக்கொண்டு தன் பக்கம் மற்றவர் தொட முதல் ஓடி விட வேண்டும். மாட்டிக் கொண்டால் அவர் ஆட்டமிழப்பார்.
ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.
சங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும் இவ்வாட்டம் வெவேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. இது சிறுபாடு விளையாட்டு என்பது தமிழர் கொள்கை.
பாறை அல்லது திண்ணையில் கோடு போட்ட அரங்கம். முக்கோணக் கூம்புக் கோடு. கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
விளையாடும் முறை
ஆடுகள் என்னும் பெயரில் 15 சிறு காய்கற்கள். புலி என்னும் பெயரில் 3 சற்றே பெரிய காய்கற்கள். கோடுகள் ஆடும் புலியும் ஓடும் வழிகள். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். புலிக்காய்கள் உச்சியில் ஒன்றும் அடுத்த சந்திகளில் இரண்டுமாக முதலில் வைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். ஒரு ஆடு இறங்கியதும் புலி அடுத்த சந்திக்கு நாலாப்பக்கமும் நகரும். நகரும்போது அடுத்த சந்தியில் ஆடு இருந்து அடுத்த நேர்த்திசைச் சந்தி காலியாக இருந்தால் புலியை வெட்டிவிட்டுத் தாவும். இவ்வாறு புலி தாவ இடம் இல்லாமல் ஆடு புலியைக் கட்டவேண்டும். எல்லா ஆடுகளும் இறங்கிய பின்னர் ஆடும், புலியும் மாறி மாறி நகர்த்தப்படும். புலி நகரமுடியாமல் ஆடுகள் புலியைக் கட்டிவிட்டால் ஆட்டுக்கு வெற்றி. எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலிக்கு வெற்றி. இதுதான் ஆட்டம்.
5.ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு,
மதுரை மாவட்டம் :அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு
திருச்சி : பெரிய சூரியூர்,
நாமக்கல் மாவட்டம்: அலங்காநத்தம்,
சேலம் மாவட்டம்: தம்மம்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம்: நார்த்தாமலை,
திருவண்ணாமலை மாவட்டம்: ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை,
போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
பெயர்க்காரணம்:
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.
வகைகள்:
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.
வேலி ஜல்லிக்கட்டு
வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வடம் ஜல்லிக்கட்டு
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
வரலாறு:
ஏறுதழுவலை சித்தரிக்கும் ஒரு கல்வெட்டு
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துசமவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்
சங்க இலக்கியமான கலித்தொகை
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை:
"கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்."
என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்
ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது . குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்
ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது.
ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
மற்ற நாடுகளில் காளைப்போர்:
ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
தென்மாவட்டங்களின் பங்கேற்பு
ஏறுதழுவும் விழா
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.
உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
தற்காலச் சிக்கல்கள்
ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன.
ஆதரிப்போர் கருத்து
சல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடாகக் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்ப்போர் கருத்து
சல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்கு கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம். கேரளாவில் இன்னொரு விலங்கை மனிதனின் களியாட்டங்களுக்கு பாவிப்பதையும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதைவிட கடுமையான நிகழ்வுகளையும் தடை செய்தால்தான் இதையும் தடைசெய்ய முடியும் என்ற சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் இவர்கள் மறுக்கின்றார்கள். ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி அடிப்படையிலேயே தவறாக இருப்பதால் அதை விட்டுக்கொடுத்து விலங்குகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமன்றி சல்லிக்கட்டு என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் பண்பாடு அல்லாது ஒரு சில மாவட்டங்களிலுள்ள சில மக்கட்பிரிவின் அடையாளம் என்ற வாதமும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.
2008-2011--இல் நடந்த சம்பவங்கள்
சல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ள ”தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது. இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியிலிட்டது. தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர்.
உச்ச நீதிமன்றத்தில் இந்திய விலங்கு நல வாரியம் சல்லிக்கட்டு தொடர்பாக முன்வைத்த சில ஆலோசனைகள்:
ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் மூன்று சல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
குறைந்த அளவாக ரூ.20 இலட்சத்தை வைப்புநிதியாக சல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
தகுந்த மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஐந்து பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.
ஏற்கனவே உள்ள சல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஒரு இலட்சம் தண்டமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவை ஒட்டி சல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011 இல் சல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தன. பொங்கல் முடிந்த பின்னரும் 2011 இல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 இல் சல்லிகட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது.
சல்லிக்கட்டை எதிர்த்து 2011 இல் உச்சநீதிமன்றத்தில் மேலுமொரு மனு பெடா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது. 2011, சூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் "காளை" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது.
2012--இல் நடந்தவை
ஒன்றிய அரசின் மேற்கூறிய கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் சனவரி 16ஆம் நாள் பாலமேட்டிலும், 17ஆம் நாள் அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதற்காகக் கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகத் தங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம் இட்ட 77 கட்டளைகளுள் சில:
1.காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
2.காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறப்பட வேண்டும்.
3.காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசி வெறியூட்டுதல் கூடாது.
4.ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக் கூடாது.
5.காளைகளை அடிப்பதோ வாலைப்பிடித்துத் திருகுவதோ வேறு விதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.
6.காளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும்.
2014--இல் நடந்தவை
மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது.
ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.
2016--இல் நடந்தவை
ஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. இந்திய விலங்குகள் நல வாரியம் ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக பெட்டா அமைப்பு கூறியது. பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுதியை எதிர்த்து திங்கள் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது.
ஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள்
ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.
சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.
தலை:
காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.
கழுத்து:
காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.
தண்டுவடம்:
கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.
நெஞ்சு:
நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.
அடிவயிறு:
காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.
பிறப்புறுப்புப் பகுதி:
ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.
கால்கள்:
தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.
Nice
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete